Chennai
oi-Noorul Ahamed Jahaber Ali
சென்னை: 2 மாதங்களில் பெட்ரோல் விலையை ரூ.10 உயர்த்திவிட்டு ரூ.9.50 வரியை குறைப்பது கொள்ளையடிப்பதற்கு சமம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தினசரி பைசா கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது.
இந்த நிலையில் 4 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்கள் விலையை உயர்த்தாமல் இருந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 10 நாட்களாக மீண்டும் தொடர்ந்து விலையை உயர்த்தியது வாகன ஓட்டிகளை அவதியடைய செய்தது.
சேட்டன்களுக்கு 2வது லட்டு.. பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்த கேரளா, மத்திய அரசை அடுத்து நடவடிக்கை

விலையேற்றம்
137 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி நீடித்து வந்த இந்த விலை, கடந்த மார்ச் 22 ஆம் தேதி உயர்த்தப்பட்டது. அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டன. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடும் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து ஒருமாதமாக விலையேற்றம் செய்யப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக சென்னையில் சென்னையில் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரி குறைப்பு
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக அவர் அறிவித்து உள்ளார். பெட்ரோல் மீதான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்
இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாநில அரசுகளும், குறிப்பாகக் கடந்த நவம்பர் 2021 வரி குறைக்கப்படாத மாநிலங்கள், இதேபோன்ற வரி குறைப்பை அமல்படுத்தி, சாமானிய மக்களின் சுமையைக் குறைக்க வலியுறுத்துவதாக நிர்மலா சீதாராமன் மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ப.சிதம்பரம் கருத்து
2 மாதங்களில் பெட்ரோல் விலையை ரூ.10 உயர்த்திவிட்டு ரூ.9.50 வரியை குறைப்பது கொள்ளையடிப்பதற்கு சமம். மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சர் வழங்கியுள்ள அறிவுரை அர்த்தமற்றது. மத்திய அரசு குறைத்துள்ள கலால் வரியில் ஒரு ரூபாய்க்கு ரூ.41 பைசா மாநிலங்களுக்கு சொந்தமானது தான். அதாவது மத்திய அரசு ஒரு ரூபாய்க்கு 59 பைசாவையும் மாநில அரசு 41 பைசாவையும் குறைப்பதாகவே அர்த்தம். உண்மையான வரிக்குறைப்பு என்பது மத்திய அரசு தங்கள் செஸ் வரியை குறைப்பதுதான்.
English summary
Raise Rs 10 per litre in 2 months and cut Rs 9.50 per litre on petrol is like rob – P.Chidambaram: 2 மாதங்களில் பெட்ரோல் விலையை ரூ.10 உயர்த்திவிட்டு ரூ.9.50 வரியை குறைப்பது கொள்ளையடிப்பதற்கு சமம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Story first published: Saturday, May 21, 2022, 22:55 [IST]