Chennai
oi-Noorul Ahamed Jahaber Ali
சென்னை: ஒரு சாதாரண இந்திய குடிமகனாகவும், பெருமைக்குரிய தமிழனாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மோசமான நடந்தையால் வெட்கப்படுகிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
”பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம்” – 3 முறை முழங்கிவிட்டு சென்னையில் உரையை நிறைவு செய்த மோடி
இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மேடையிலேயே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “ஒரு சாதாரண இந்திய குடிமகனாகவும், பெருமைக்குரிய தமிழனாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மோசமான நடந்தையால் வெட்கப்படுகிறேன். நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இங்கு வந்தார். பாஜகவின் நிகழ்ச்சிக்காக வரவில்லை. முதலமைச்சர் இந்த விழாவில் நன்றாக நடந்துகொள்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் தன்னை தானே இழிவுபடுத்திக்கொண்டார்.

கச்சத்தீவை தாரை வார்த்தது யார்?
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு குறித்து பேச வேண்டும் என்கிறார். ஆனால், அவர் கடந்த 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் கச்சத்தீவு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதை மறந்துவிட்டார். 1974 ஆம் ஆண்டிலிருந்து திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து மக்களை கூட்டாக கொள்ளையடித்து வருகின்றனர். ஏன் இந்த திடீர் விழிப்புணர்வு? ஜி.எஸ்.டி. விவகாரத்தில், ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகள் எப்போதும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படுபவை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உணர்த்த வேண்டும். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு மீதம் இருக்கும் இழப்பீட்டை வழங்குவதற்கான விருப்பத்தை தமிழ்நாடு அரசாங்கம் எடுத்தது. இல்லாத பிரச்சனைகளை அவர்கள் உருவாக்குகின்றனர்.

ஜி.எஸ்.டி. கவுன்சில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூட்டாட்சி பற்றி பேசிக்கொண்டே, கூட்டாட்சிக்கு உதாரணமாக திகழும் ஜி.எஸ்.டி. கவுன்சிலை அவமானப்படுத்துகிறார். கூட்டாக அமைக்கப்பட்ட விதிகளின்படியே நிலுவைத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. தனது விருப்பு வெறுப்புகளை மட்டுமே முக்கியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணுகிறார். இதுதான் ஒருமித்த கருத்தை புரிந்துகொள்ளாத வழமையான வாரிசு அதிகாரம். தற்போது ஜி.எஸ்.டி. வருவாய் கடந்த ஓராண்டாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களும் பயனடைந்து வருகின்றன.

அரசியல் செய்கிறார்
ஆனால் மு.க.ஸ்டாலினோ அல்லது திமுகவோ உண்மைகளை பொருட்படுத்துவது இல்லை. அரசியல் செய்வதில் மட்டுமே அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மொழியை எடுத்துக்கொண்டால், பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மீதான, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் மீதான தனது பற்றை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி வருகிறார். ஸ்டாலினுக்கு பதில் தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் இந்த விவகாரத்தில் தான் கூறியதை அவரே நம்ப மாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அற்பமான அரசியலை மட்டுமே செய்து வருகிறார்.
English summary
I am absolutely ashamed by the appalling conduct of TN CM M.K.Stalin – Annamalai: ஒரு சாதாரண இந்திய குடிமகனாகவும், பெருமைக்குரிய தமிழனாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மோசமான நடந்தையால் வெட்கப்படுகிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Story first published: Thursday, May 26, 2022, 22:25 [IST]