Colombo
oi-Vigneshkumar
கொழும்பு: இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் எப்படி இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனரோ, அதேபோல இப்போது மீண்டும் தமிழகத்திற்கு வர தொடங்கி உள்ளனர்.
அண்டை நாடான இலங்கை இப்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், வேறுவழியின்றி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடும் நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராகப் பதவியேற்ற ரனில் விக்ரமசிங்க, நிலைமையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இருப்பினும், அதில் தற்போது வரை பெரிய பலன் கிடைக்கவில்லை.
இலங்கை: சம்பளம் இல்லாத அமைச்சர்கள் பதவியேற்பு- எம்.பிக்களுக்கான நாடாளுமன்ற கேண்டீன் இழுத்து மூடல்!

இலங்கைத் தமிழர்கள்
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சத்தில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இதனால் வேறுவழியின்றி அங்கு வசிக்கும் மக்கள் சமீப நாட்களில் ஆபத்தான முறையில் படகுகள் மூலம் இந்தியாவுக்கு வரும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. சமீப நாட்களில் மட்டும் கைக்குழந்தைகள் உட்பட சுமார் 80க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இப்படி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

பல லட்சம்
இக்கட்டான பொருளாதார சூழ்நிலையிலிருந்து தப்ப மட்டுமின்றி, பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கையைத் தேடியும் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். இப்படி வருபவர்களில் பெரும்பாலானோர், இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் பல லட்சம் பணம் செலுத்தி ராமேஸ்வரத்திற்குப் படகில் வந்து சேர்கிறார்கள்.

காரணம்
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில், அங்கிருந்து பல ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இலங்கையில் போர் முடிந்த பிறகு, புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் பல குடும்பங்கள் மீண்டும் இலங்கை திரும்பி இருந்தனர். ஆனால், போருக்குப் பின் அங்குப் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடியவில்லை. வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சியும் இல்லை. இந்தச் சூழலில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களை நம்பிக்கையற்றவர்களாக ஆக்குவதாக ஃபோரம் ஃபார் ரிட்டர்னிஸின் ஒருங்கிணைப்பாளர் பி. நாகேந்திரன் கூறுகிறார்.

போர் காலம்
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடைபெற்ற போது, பல லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அப்போது 1987 -1990 வரையிலான காலத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையும் அங்கு மூர்க்கத்தனமான தாக்குதலிலேயே ஈடுபட்டது. இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சமடைந்த சமயத்தில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் பல அப்பாவி மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்தனர்.

நாடு திரும்பினர்
அதன் பின்னர் எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாமல் அவர்கள், ஒவ்வொரு இடத்திற்கும் புலம்பெயர்ந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. இலங்கை உள்நாட்டுப் போர் சற்று ஓயும் சமயத்தில், சில குடும்பங்கள் தாயகம் திரும்பின. அதிலும் மே 2009இல் போர் முடிந்த பின்னர், அதிகளவில் மக்கள் இலங்கை திரும்பத் தொடங்கினர். இருந்த போதிலும், அவர்களால் அங்கு நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல் போனது.

3 முறை முயற்சி
65 வயதான எஸ்.நடேசலிங்கம், தமிழகத்தில் சுமார் 35 வருடங்கள் அகதியாக இருந்துள்ளார். இரு தோல்விகளுக்குப் பிறகு அவர் 2019 இல் வெற்றிகரமாகத் தாயகம் திரும்பினார். இது குறித்து அவர் கூறுகையில், “1985 முதல் 1987 வரை, 1990 முதல் 1994 இலங்கை திரும்ப முயன்றேன். இருப்பினும் முடியவில்லை, இறுதியாக 2019இல் எனது தாயகம் திரும்பினேன்.

தமிழ்நாட்டில் அகதிகள் வாழ்க்கை
தமிழ்நாட்டில் அகதிகள் வாழ்க்கை பாதுகாப்பானது. உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் கூட அரசு கொடுக்கும் பணத்தில் குடும்பம் நடத்தலாம். அகதிகள் முகாமில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தலாம். பெரும்பாலான மக்களுக்கு இப்படி இருப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த அகதி என்று முத்திரையை மட்டும் சுமந்து செல்ல வேண்டி இருக்கும். இதன் காரணமாகவே பலரும் தங்கள் தாயகம் திரும்ப விரும்புகின்றனர்” என்றார்.

காரணம்
இப்படிக் கஷ்டப்பட்டு இலங்கை திரும்பியவர்கள் தான் இப்போது மீண்டும் வெளியேற விரும்புகின்றனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக இங்குப் பல இடங்களில் போருக்கு பிந்தைய புனரமைப்பு பணிகள் நடக்கவில்லை. இதனால் தாயகம் திரும்பிய மக்கள் பெரும் கடன் வலையில் சிக்க நேர்ந்தது. இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, நாடு திரும்பிய தமிழர்களுக்கு மிக மோசமான துயரத்தைக் கொடுத்துள்ளது. இதனால் வேறு வழியின்றி அவர்கள் மீண்டும் தமிழகத்திற்குச் செல்லும் சூழல் உருவாகி உள்ளது.
English summary
Sri Lankan Tamils are making dangerous trip on boats to reach Tamil Nadu, amid dire economic situation: (பொருளாதார பாதிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள்) All things to know about Sri lanka’s economic situation and its effect on Lankan tamils.
Story first published: Saturday, May 21, 2022, 13:15 [IST]