India
bbc-BBC Tamil
தாயோ தந்தையோ இறந்த நிலையிலும் தங்கள் பள்ளித் தேர்வுகளை எழுத குழந்தைகள் சென்றுள்ளனர் என்ற செய்திகளை அண்மைக்காலமாக நீங்கள் அதிகம் கவனித்திருக்க முடியும். கல்வி மீதான குழந்தைகளின் ஆர்வத்தையும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த குடும்பத்தினர் ஆதரவால்தான் இது சாத்தியமாகிறது என்று சமூக வலைதளங்களில் வெகுவாக இந்தச் செய்திகள் பாராட்டப்படுவதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
அதே போல, தாய் இறந்த சம்பவத்தை, தந்தையே மறைத்து தன் மகள்களை பொதுத்தேர்வெழுத அனுப்பிய சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது.
நடந்தது என்ன?
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துமாரி ஆடு மேய்க்கும் வேலையை செய்து வந்துள்ளார்.
இவர்களுக்கு வாணீஸ்வரி, கலாராணி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது இருவரும் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். தாய் முத்துமாரி ஆடுகளை வீட்டில் வளர்த்து பராமரித்து வருவதோடு தனது இரு மகள்களும் பள்ளிக்கு சென்ற பின் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் அவர் கழுகுமலை சாலையிலுள்ள குப்பை கிடங்கு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாகச் சென்ற கார் ஒன்று முத்துமாரி மீது மோதியதோடு அவர் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக
கார் மோதிய விபத்தில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து முத்துமாரியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகள்களிடம் மறைத்த தந்தை
இந்த விபத்து நடந்து தாய் உயிரிழந்த நிலையில் நேற்று இறந்த முத்துமாரியின் மகள்கள் வாணீஸ்வரியும், கலாராணியும் பத்தாம் வகுப்பு தேர்வை எழுத இருந்தனர். இதனால் விபத்து நடந்ததை மகள்களுக்கு தெரியப்படுத்த கூடாது என முடிவு செய்த பெரியசாமி, தனது இரு மகள்களையும் உறவினர் வீட்டில் தங்க வைத்தார்.
தனது தாய் இறந்ததே தெரியாமல், தேர்வு எழுத நடுவக்குறிச்சி தனியார் பள்ளிக்கு இருவரும் உறவினர் வீட்டில் இருந்து சென்றனர். பின்னர் தேர்வு எழுதி முடித்த பிறகு இருவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.
தாய் இறந்த செய்தி அறிந்ததும் இருவரும் கதறி அழுது கண்ணீருடன் வந்ததை பார்த்த அனைவரின் கண்களும் கலங்கியதோடு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மனைவியின் உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்த நிலையில் தனது மகள்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தேர்வு எழுத மகள்களை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தையின் செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நிகழ்வுகள்:
இதற்கு முன்பும் தமிழகத்தில் இதேபோன்ற நிகழ்வுகள் கடந்த சில வாரங்களில் நடந்துள்ளன.
இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம் காத்தான் பகுதியிலும், தன் தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி சங்கமித்ரா தேர்வெழுதச் சென்றார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தந்தை இறந்த துக்கத்திலும் +2 பொதுத்தேர்வு எழுதிய சந்தோஷ் என்ற மாணவர். தந்தைக்கு இறுதி மரியாதை செலுத்தி விட்டு, தேர்வறைக்கு சென்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
English summary
father hides mother death to his daughters for examination in tenkasi