India
oi-Vignesh Selvaraj
கச்சார் : அசாமின் கச்சார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஐஏஎஸ் அதிகாரி கீர்த்தி ஜல்லி நடந்து சென்று பார்வையிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தானே நேரடியாக களத்தில் இறங்கிய பெண் துணை ஆணையர் கீர்த்தி ஜல்லியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
50 ஆண்டுகளாக வெள்ளத்தால் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வரும் தங்கள் கிராமத்திற்கு ஒரு துணை ஆணையர் வருவது இதுவே முதல்முறை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அசாம், பீகாரில் வெள்ளம்.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை.. கேரளாவிற்கு மஞ்சள் அலார்ட்.. வானிலை அப்டேட்

அசாமில் வெள்ளம்
வடகிழக்கு மாநிலமான அசாம் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேலாக இடைவிடாமல் கொட்டி வரும் கனமழையால் அங்குள்ள 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அசாமில் 1,709 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 82 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலத்தில் பயிர்கள் நாசமாகியுள்ளன. பல இடங்களில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்துள்ளன.

மீட்புப் பணிகள்
அசாமில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில், 19 ஆயிரம் குழந்தைகள் உட்பட, 91 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 25-ஐ கடந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

கச்சார் மாவட்டம்
அசாமில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கச்சார் மாவட்டமும் ஒன்றாகும். கச்சார் மாவட்டத்தில் 1.6 லட்சம் பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அம்மாவட்டத்தின் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 5,915 ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கீர்த்தி ஜல்லி
கச்சார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளை துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி பார்வையிட்டு வருகிறார். சேலை அணிந்து சேறும் சகதியுமான பகுதிகளில் கீர்த்தி ஜல்லி நடந்து சென்று மக்களை மீட்பதும், மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதும் அப்பகுதி மக்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நெட்டிசன்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

தாழ்வான பகுதிகள்
துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆய்வு எதிர்காலத்திற்கான சிறந்த செயல் திட்டங்களை உருவாக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் உதவும். கடந்த 50 ஆண்டுகளாக தாங்கள் வெள்ள அபாயத்தை எதிர்கொள்வதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். நாங்கள் அங்கு சென்று உண்மையான பிரச்சினைகள் என்ன என்பதைப் பார்த்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுவே முதல் முறை
பாரக் ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தால் ஆண்டுதோறும் நாங்கள் துன்பப்பட்டு வருகிறோம். ஆனால், மாவட்ட துணை ஆணையர் எங்கள் கிராமங்களுக்கு வருவது இதுவே முதல் நிகழ்வு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் பாதிப்புகளை குறைக்கும் வகையில் அப்பகுதி கிராமங்களை பாதுகாப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மக்களிடம் துணை கமிஷனர் கீர்த்தி ஜல்லி உறுதியளித்துள்ளார்.
English summary
Deputy Comissioner Keerthi Jalli IAS inspects flood-devastated areas, examins relief measures in Assam.
Story first published: Friday, May 27, 2022, 10:59 [IST]