Chennai
oi-Vignesh Selvaraj
சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவை சுற்றியே செய்தி நகர்வுகள் இருக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறாராம்.
அவ்வப்போது பாஜக தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டே இருந்தால் அதுதொடர்பான பேச்சு எழுந்துகொண்டே இருக்கும் என்பதற்காக பாஜக மேலிட தலைவர்களை தமிழ்நாட்டுக்கு இறக்கி வருகிறாராம்.
4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தேன்! அதுவும் இரட்டை இலை சின்னத்தில்..? என்ன ஆச்சு ஜோதிமணிக்கு?
அடுத்த மூன்று மாதங்களுக்கு மோடி, யோகி ஆதித்யநாத், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி என வரிசையாக பாஜக மூத்த தலைவர்கள் தமிழகம் வர இருக்கிறார்கள்.

பாஜக
பா.ஜ.க தமிழகத்தில் வலுவாகத் தடம் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்கள் மத்தியில் பாஜகவை வளர்த்தெடுப்பதற்காக பாஜக மேலிட தலைவர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்த பின்னர் அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அக்கட்சியின் செயல்பாடுகளில் வேகம் கூடியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவின் நடவடிக்கைகளை எதிர்ப்பதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விட ஸ்பீடாக செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை.

அண்ணாமலை
அண்ணாமலை தமிழக பாஜக தலைவரான பிறகு தான் சொல்பவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என மேலிடத்தில் கேட்டு வந்தார். ஆனால், மூத்த நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், தலைமையிடம் சொல்லி தனது திட்டத்தை செயல்படுத்தினார். அமித்ஷா சென்னை வந்து சென்ற சில நாட்களிலேயே பா.ஜ.கவில் புதிதாக 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட தலைவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இப்போது மாநில, மாவட்ட பொறுப்புகளில் உள்ளவர்களில் பெரும்பாலோனார் அண்ணாமலையில் ஆதரவாளர்கள்தான்.

டெல்லியுடன் நெருக்கம்
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து பாஜக தலைமையால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட அண்ணாமலை டெல்லி தலைமையுடன் ஆரம்பம் முதலே நெருக்கமாக இருந்து வருகிறார். அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழக பாஜகவின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவே டெல்லிக்கு ரிப்போர்ட் செல்கிறது. தமிழக பொறுப்பாளரான சி.டி.ரவி அண்ணாமலைக்கு நெருக்கமானவர். அதனால், அண்ணாமலை என்ன ஆதரவு கேட்டாலும் மேலிடம் உடனே கண்ணசைவு தருகிறதாம்.

அடுத்த ஆக்ஷன்
தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த மண்டல வாரிய பொறுப்பாளர்களை நியமித்துள்ள அண்ணாமலை, பாஜகவை சுற்றியே செய்தி நகர்வுகள் இருக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். அதாவது, அவ்வப்போது பாஜக தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்து கொண்டே இருந்தால் அதுதொடர்பான பேச்சு எழுந்துகொண்டே இருக்கும். அதற்காகவே தொடர்ந்து பாஜக மேலிட தலைவர்களை தமிழ்நாட்டுக்கு இறக்கி வருகிறாராம்.

பாஜக தலைவர்கள் வருகை
கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தார். இந்த மாத துவக்கத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்தார். துக்ளக் ஆண்டு விழாவிலும் பங்கேற்றார். சமீபத்தில் தமிழகம் வந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், பெரம்பூர் ஐ.சி.எஃப் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அடுத்த மாதம், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியும் தமிழகம் வர உள்ளார். தமிழகத்தில் மத்திய அரசு அமைத்து வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பார்வையிட இருக்கிறார்.

அமைச்சர்கள்
இவர்கள் மட்டுமல்லாமல் அடுத்து வரும் மூன்று மாதங்களில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட, பல முக்கிய அமைச்சர்கள் உட்பட பல பாஜக முக்கிய தலைவர்கள் தமிழகத்துக்கு வர உள்ளனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் விரைவில் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். அவர்கள் அனைவருமே அரசு முறைப் பயணம் போல வந்தாலும், அரசியல் பேச்சும் கண்டிப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி
இதற்கிடையே, வரும் 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். சென்னையில் பல்வேறு திட்டங்களை அவர் துவக்கி வைக்க உள்ளார். தமிழகம் வரும் பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து பாஜகவின் முக்கிய தலைவர்கள் தமிழகம் வருவதும் அண்ணாமலை ஆபரேஷனின் ஒருபகுதிதான் என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தினர்.
English summary
Annamalai’s plan to strengthen BJP: தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த, பாஜக மேலிட தலைவர்களை தொடர்ந்து தமிழகம் வரவழைத்து வருகிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.